சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ப.சிதம்பரத்தை பேச விடாமல் பெண்கள் சிலர் குறுக்கிட்டு மகளிர் உரிமைத் தொகை வரவில்லையென புகார் கூறினர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இண்டியா கூட்டணிக் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ப.சிதம்பரம் பேசுகையில் ‘‘மு.க.ஸ்டாலின் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 தருவோம் என்றார். மொத்தம் ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு கொடுத்துள்ளார்’’ என்றார்.
அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள் சிலர் குறுக்கிட்டு ‘நிறைய பேருக்கு உரிமைத் தொகை வரவில்லை’ என்றனர். அப்போது ப.சிதம்பரம் ‘‘ஒரு சிலருக்கு வராமல் இருக்கலாம். அதையே குறையாகச் சொல்லும் நீங்கள், 1.15 கோடி பேருக்கு கிடைத்ததை கூறுங்கள். உங்கள் 2 பேருக்கு வரவில்லையென்றால் இங்குள்ள 200 பேருக்கு வந்திருக்கிறது’’ என்றார்.
எனினும் அந்த பெண்கள் தொடர்ந்து சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தனர். இதையடுத்து அங்கிருந்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ‘‘உங்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறியதை அடுத்து அவர்கள் சமரசம் அடைந்தனர்.