மதுரை: “மக்களவைத் தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்கு சேகரிப்பது பெருமையாக இருக்கிறது” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசன் தலைவராக உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெற்றுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மதுரை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக கமலஹாசன் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் இன்று மதுரை வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவருக்கு மாநகர மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ , முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி மற்றும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “திமுக கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் தோழர் வெங்கடேசனுக்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். இந்தத் தேர்தலில் நல்லவர்களுக்கு மீண்டும் வாய்ப்புக் கேட்டு வருவது பெருமையாக உள்ளது. நல்லவர்களுக்கு வாக்களியுங்கள். தேர்தல் பிரச்சாரம் நல்ல படியாக சென்று கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.