Saturday, May 18, 2024




Homeதமிழ்நாடு“சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்” - எடப்பாடி பழனிசாமி @ காங். நிர்வாகி சந்தேக...

“சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்” – எடப்பாடி பழனிசாமி @ காங். நிர்வாகி சந்தேக மரணம்

சென்னை: “ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம். சட்டம் – ஒழுங்கை காக்க தமிழக அரசு ஆக்கபூர்வத்துடன் செயல்பட வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் 2 நாட்களாக காணவில்லை என்று, அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.

தமிழகத்தில் எந்தவொரு குற்றச் செயலையும் சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எந்தவித அச்சமுமின்றி சமூக விரோதிகள் செய்யத் துணிந்துவிட்டனர். இந்த ஆட்சியும் அதற்கேற்றாற்போலவே சட்டம் – ஒழுங்கின் மீது எந்த அக்கறையுமின்றி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது.

ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் சட்டம் – ஒழுங்கை காக்க ஆக்கபூர்வத்துடன் செயல்படுமாறு அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கை – கால்கள் கட்டப்பட்டுள்ளதால் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு முழு விவரங்கள் வெளியே வரும் எனவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார். | முழுமையாக வாசிக்க > நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் – போலீஸ் எழுப்பும் சந்தேகம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments