Saturday, May 18, 2024




Homeதமிழ்நாடு“குடிநீர் பிரச்சினையை கவனிக்காமல் கொடைக்கானலில் ஓய்வு” - ஸ்டாலின் மீது இபிஎஸ் சாடல்

“குடிநீர் பிரச்சினையை கவனிக்காமல் கொடைக்கானலில் ஓய்வு” – ஸ்டாலின் மீது இபிஎஸ் சாடல்

சேலம்: “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தில் ஒற்றை செங்கல்லை தூக்கி காட்டி தமிழகத்தைச் சுற்றி வந்தார். ஆனால், பல லட்சம் செங்கற்கல்லை கொண்டு கட்டப்பட்ட தலைவாசல் கால்நடை பூங்கா இன்னும் திறக்கப்படாமல் உள்ளது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் கடந்த 30-ம் தேதி தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, பழம், குடிநீர், ஹார்லிக்ஸ் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. ஆங்காங்கே குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள குடிநீர் வேண்டி போராட்டங்களிலும் சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதை கவனிக்காத தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க கொடைக்கானல் சென்றுள்ளார். மக்களைப் பற்றி ஏதும் கவலை கொள்ளாமல், மக்களைப் பற்றி சிந்திக்காமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்படாத முதல்வராக உள்ளார்.

மேட்டூர் அணை வறண்டு வரும் நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெற்று தர அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை கர்நாடக அரசு மதிக்கவில்லை. தமிழக அரசு இதனை வலியுறுத்தி தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழக முதல்வர் இதனை கண்டு கொள்ளாதது கண்டத்துக்குரியது.

ஏற்காடு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய இபிஎஸ்

தமிழகத்தில் கோதுமை பீர் அறிமுகப்படுத்தியுள்ள திமுக அரசு, மதுவை விற்பதிலேயே குறியாக உள்ளது. அவர்களுக்கு வருமானம்தான் முக்கியம். மக்களைப் பற்றி கவலை ஏதும் இல்லை. தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்து, மக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. அதற்கு பிறகு வந்த திமுக அரசு ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் புதிய பேருந்துகள் வாங்குவதாக அறிவித்து, இதுவரை வாங்கவில்லை. இதுகுறித்து சட்டமன்றத்திலும் அறிக்கையின் வாயிலாக கேள்வி எழுப்பி வருகிறேன். ஆனால், பதில் இல்லை.

தமிழகத்தில் பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது குறித்து, பொதுமக்கள், அரசு பேருந்து ஓட்டுநர்கள், நேரடியாக புகார் தெரிவித்து வருவது திமுக ஆட்சியின் அவலத்தை காட்டுகிறது. இனியாவது புதிய பேருந்துகளை வாங்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.

அதிமுக அரசு கொண்டுவந்த பல்வேறு தொலை நோக்கு திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளில் காவிரி உபரி நீரை நிரப்பும் திட்டம், ரூ.1000 கோடியில் தலைவாசலில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்கா திட்டம் ஆகியவற்றை முடங்கியுள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகள் 85 சதவீதம் அதிமுக ஆட்சியில் முடிக்கப்பட்டு, இதுவரை திமுக அரசு முடிவுக்கு கொண்டு வரவில்லை . இது போன்ற திட்டங்களை திமுக அரசு உள்நோக்கத்துடன் முடக்கி வைத்துள்ளது.

ஒற்றை செங்கல்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தில் தூக்கி காட்டி தமிழகத்தை சுற்றி வந்தார். ஆனால், பல லட்சம் செங்கற்களை கொண்டு கட்டப்பட்ட தலைவாசல் கால்நடை பூங்கா இன்னும் திறக்கப்படாமல் உள்ளது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments