Saturday, April 27, 2024




Homeதமிழ்நாடு“எங்கள் தகுதி குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை” - கனிமொழி காட்டம் @ கரூர்

“எங்கள் தகுதி குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை” – கனிமொழி காட்டம் @ கரூர்

கரூர்: தொடர்ந்து பொய்களைப் பேசிவரும் அண்ணாமலைக்கு எங்கள் தகுதி குறித்து பேச அருகதை இல்லை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

கரூர் வெங்கமேடு அண்ணா சிலை அருகில் இண்டியாகூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து இன்று (மார்ச் 28) திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய கனிமொழி, “கரூர் தொகுதிக்காக பலமுறை நாடாளுமன்றத்தில் பேசி, போராடி சஸ்பெண்ட் ஆனவர் ஜோதிமணி. நாடாளுமன்றத்தில் எதிர்த்து கேள்வி கேட்டால் சஸ்பெண்ட், வெளியே எதிர்த்து கேள்வி கேட்டால் ஜெயில் என்ற நிலை தான் உள்ளது. உடல்நிலை சரியில்லை என்றாலும் இவ்வளவு நாள் செந்தில் பாலாஜி சிறையில் வைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் மறுக்கப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் வெளியே வந்து விடுவார். செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும், கரூரில் போட்டியிடாமல் அண்ணாமலை பயத்தில் கோவையில் போட்டியிடுகிறார்.

அண்ணாமலையும் சரி, அவரது கட்சியும் சரி பொய் மட்டுமே பேசி வருகின்றனர். 20 ஆயிரம் புத்தகம் படித்ததாக கூறுகிறார். ஒரு மனிதன் ஐந்து வயதில் ஆரம்பித்து, ஒரு நாளைக்கு இரண்டு புத்தகம் படித்தால் தான் அது சாத்தியம்.

கோவில்பட்டியில் வீரலட்சுமி என்ற பெண் சுதந்திரப் போராட்ட வீரர் என்று கூறினார். ஆனால் அவர் பிறந்ததே 1961 ஆம் ஆண்டு. அவர் எப்படி சுதந்திரப் போராட்ட வீரராக இருக்க முடியும்? இப்படித்தான் தொடர்ந்து பொய் பேசி வருகிறார்.

சங்க காலத்தில் அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வல்வில் ஓரி அரசரை சுதந்திரப் போராட்ட வீரர் என அண்ணாமலை கூறுகிறார். எங்கள் தகுதி குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை.

ரூ.15 லட்சம் தருவதாக சொல்லி கையில் இருந்த ரூ.1000, ரூ.500-ஐயும் உங்களிடம் இருந்து பிடுங்கி விட்டார்கள். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நாட்டில் ரூ.410 ஆக இருந்த சிலிண்டர், தற்போது 1100 ரூபாய்க்கு விற்கிறது. மானியம் என்று சொல்லிவிட்டு இரண்டு மடங்கு விலை ஏற்றி விட்டனர்.

குழப்பத்தில் கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிக்கு, சிறு வியாபாரிகள் முதல், சிறிய தொழிற்சாலைகள் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. பாஜக ஆட்சி அதானி, அம்பானி போன்ற பணக்காரர்களுக்கான ஆட்சி. அம்பானி வீட்டு கல்யாணத்துக்காக பத்து நாளில் பன்னாட்டு விமான நிலையம் கொண்டு வந்ததுதான் மோடி ஆட்சியின் சாதனை.

கல்விக் கடன் ரத்து இல்லை. விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார விலையும் இல்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான 68,607 கோடி ரூபாய் கடனை பாஜக ஆட்சி ரத்து செய்துள்ளது.

கரூர் தொகுதி மக்களுக்காக ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் தொகுதியில் 15-க்கும் மேற்பட்ட பாலங்கள் கொண்டு வந்த ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று கனிமொழி பேசினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments